Published : 14 May 2016 12:53 PM
Last Updated : 14 May 2016 12:53 PM
தமிழகத்தில் உள்ள 8 ஆறுகளை நீர்வழிப் பாதைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள துறைமு கங்களை மேம்படுத்த மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. இதில் தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில்
எல் அன்ட் டி இறக்குமதி முனையம், ரூ.760 கோடியில் வடக்கு சரக்கு தளம் விரிவாக்கம், ரூ.80 கோடியில் உணவு தானியங்களுக்கான தனி தளம், ரூ.1,200 கோடியில் கூடுதல் சரக்கு பெட்டக முனையம், ரூ.250 கோடியில் நிலக்கரி தளத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளன.
பட்ஜெட்டில் விவசாயம், நீர் நிலை மேம்பாட்டுக்காக மட்டும் 4 ஆண்டுகளுக்கு ரூ.80 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள 111 ஆறுகள் நீர்வழிப் பாதைகளாக மாற்றப்பட உள்ளன. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம். கால்வாய், தாமிரபரணி, மணிமுத்தாறு, பவானி, பாலாறு, காவிரி உள்ளிட்ட
8 ஆறுகள் நீர்வழிப் பாதைகளாக மாற்றப்பட உள்ளன. இதனால் உள்நாட்டு மீன்பிடி, விவசாயம், குடிநீர், நீர்வழி போக்குவரத்து, சுற்றுலா போன்ற துறைகள் வளர்ச்சி பெறும்.
இதேபோல் தமிழகம்- ஆந்திரம் இடையே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை நீர்வழிப் பாதையாக மாற்றும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.
இந்த நீர்வழிப் பாதை திட்டம் ஏற்கெனவே கங்கை நதியில் தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நதிநீர் இணைப்பு திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றும்.
கங்கை நதியை கோதாவரி யுடனும், கோதாவரியை கிருஷ்ணா நதியுடனும், கிருஷ்ணா நதியை காவிரியுடனும் இணைக்கும் திட்டம் செயல் படுத்தப்படும். இதன் மூலம் கங்கை, கோதாவரியில் ஏற்படும் வெள்ளம் காவிரிக்கு ஓடிவரும். காவிரி பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT