Published : 25 May 2022 11:32 AM
Last Updated : 25 May 2022 11:32 AM

'இந்து கடவுளை விமர்சித்துள்ள யூடியூப் சேனலை தடை செய்யவும்' - ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்

சென்னை: தரக் குறைவாகவும் நாகரிகமற்ற முறையிலும் இந்து கடவுளை விமர்சித்துள்ள U2 Brutus என்ற யூ டியூப் சேனலை உடனடியாகத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை, அதாவது Right to Freedom of Religion அளிக்கப்பட்டு இருக்கிறது. சமயச் சுதந்திர உரிமை என்பது, தனி நபர்கள் அல்லது சமூகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுவதும், அது குறித்து அரசு வாய்மூடி மவுனியாக இருப்பதும் வேதனையளிக்கிறது.

முருகப் பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனை இருந்தாலும், அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் தனது தனித் தன்மையால் சிறந்து நிற்பது கந்த சஷ்டி கவசம் ஆகும். ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள் அவர்களால் எழுதப்பட்ட கந்தர் சஷ்டி கவசத்தை, பாம்பன் சுவாமிகள் அவர்களால் அடிக்கடி மனம் உருகி பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தை 2020-ம் ஆண்டு இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டம் என்னும் யூ டியூப் சேனல். இது தொடர்பாக புகார் வந்தவுடன், கருப்பர் கூட்டம் நெறியாளரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததோடு, இதற்கு போட்டியாக இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி பேசிய இந்து தமிழ் பேரவையைச் சேர்ந்தவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த அரசு அதிமுக. இது தவிர, பிற நபர்களின் மீதும் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனையடுத்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்து இருக்கிறது இந்தக் கூட்டம். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நடராஜர் மற்றும் தில்லைக்காளி குறித்து மைனர் விஜய் என்பவர் U2 Brutus என்ற யூ டியூப் சேனல் மூலம் சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தி அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனைக் கண்டித்தும், சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவம் குறித்து அவதூறான கருத்தைப் பரப்பிய மைனர் விஜயை கைது செய்யக் கோரியும் வலியுறுத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிதம்பரத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தியதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையைப் பின்பற்றும் இயக்கமான அதிமுக பிற மதங்களை, பிறருடைய மத நம்பிக்கைகளை இழிவுபடுத்திப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எந்த மதத்தை இழிவுபடுத்தி பேசினாலும் அதை அதிமுக எதிர்க்கும். முதல்வர் என்பவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பேரறிஞர் அண்ணாவின் வழியில் செயல்படுகின்ற ஆட்சி என்று அடிக்கடி சொல்லும் முதல்வர், திமுக, கடவுளுக்கு எதிரான கட்சி அல்ல என்று அடிக்கடி சொல்லும் முதல்வர், திமுக-வில் இருப்பவர்களில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் என்று கூறும் முதல்வர், இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை அதிர்ச்சியோடும், வேதனையோடும் மக்கள் பார்க்கிறார்கள். பிற மதங்களையோ அல்லது பிற மதக் கடவுள்களையோ யார் பழித்துப் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்பது சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு உண்டு.

எனவே, இந்துக் கடவுளை இழிவுபடுத்திய, இந்துக்களின் மனதை புண்படுத்திய, தரக் குறைவாகவும் நாகரிகமற்ற முறையிலும் இந்துத் தெய்வத்தை விமர்சித்துள்ள மேற்படி U2 Brutus என்ற யூ டியூப் சேனலை உடனடியாகத் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x