

தாம்பரம்: சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கைவாசலில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனை அவரது இல்லத்தில் பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது: 32 ஆண்டுகள் சிறையிலிருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த வழக்கு தொடர்பான 26 பேரும் அவர்கள் வாழ்க்கையை புணரமைத்துக் கொள்ள தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும்.
அரசியல் சட்டப்படி அமைச்சரவை என்ன பரிந்துரை செய்கிறதோ அதன்படி நடக்க வேண்டியவர் ஆளுநர். ஆனால், அரசியல் சட்டத்தில் எத்தனை நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லாத காரணத்தால் இவர்கள், அதனைப் பயன்படுத்தி ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடுகிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஆளுநர் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆகவே, இனிமேல் ஆளுநர் இதை மீறி செயல்பட்டால் அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும் என்றார்.