Published : 25 May 2022 06:11 AM
Last Updated : 25 May 2022 06:11 AM

பருவமழை அதிக அளவில் பெய்யும் - மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக அமைச்சர் துரைமுருகன் தகவல்

சேலம்: மேட்டூர் அணையில் 118 அடி நீர் இருக்கும் நிலையில், பருவமழை அதிக அளவில் பெய்யும். அதிக நீர் வந்தால் மேட்டூர் அணை தாங்காது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால், மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்துள்ளோம் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் ஓராண்டு சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து பேசியது:

ஜூன் 12-ம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணையை 20 நாட்களுக்கு முன்னரே முதல்வர் திறந்து வைத்து, 75 ஆண்டுகளில் புதிய சாதனை படைத்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓபிஎஸ், தஞ்சையில் இன்னும் தூர்வாரி முடியவில்லை என்கிறார். எங்கோ இருக்கும் ஓபிஎஸ்-க்கு தெரிவது எங்களுக்கு தெரியாதா? ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் ஆட்சியரைக் கொண்டு கண்காணிக்கிறோம். இதற்கு காரணம் என்னவென்றால், மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழை அதிக அளவில் பெய்யும். விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வரும். 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் இப்போதே 118 அடி உயரத்துக்கு நீர் இருக்கிறது. இன்னும் அதிகமாக நீர் வந்தால், மேட்டூர் அணை தாங்காது, முன்கூட்டியே நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x