Last Updated : 25 May, 2022 06:47 AM

 

Published : 25 May 2022 06:47 AM
Last Updated : 25 May 2022 06:47 AM

ஒப்பந்ததாரர் தற்கொலையால் பதவி விலகிய கர்நாடக முன்னாள் அமைச்சர் தமிழக கோயில்களில் பரிகார பூஜை

மதுரை: கர்நாடக ஒப்பந்ததாரர் தற்கொலையால் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா குச்சனூர், மதுரை கோயில்களில் பரிகார பூஜை செய்தார்.

கர்நாடக பாஜக அரசில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரப்பா. இவர் 2012 முதல் 2013-ம் ஆண்டு வரை துணை முதல்வராகவும் இருந்தார். இவர் மீது அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு நிதி ஒதுக்க 40 சதவீத கமிஷன் கேட்பதாக கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ்பாட்டீல் குற்றம்சாட்டினார். பின்னர், தனியார் தங்கும் விடுதியில் சந்தோஷ்பாட்டீல் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் அளித்த புகாரில் பேரில் ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கால் ஈஸ்வரப்பாவை பதவி விலகுமாறு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்ததோடு அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தன. கடும் எதிர்ப்புக்கு இடையே கடந்த ஏப்.15-ம் தேதி ஈஸ்வரப்பா அமைச் சர் பதவியிலிருந்து விலகினார்.

அமைச்சர் பதவியை இழந்த பிறகு முதல் முறையாக மதுரை வந்த ஈஸ்வரப்பா, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக் கம்.

ஈஸ்வரப்பாவும், அவரது மகன் காந்தேஷூம் மதுரைக்கு நேற்று முன்தினம் விமானத்தில் வந்தனர். அவரை விமான நிலையத்தில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் ராஜரத்தினம் வரவேற்றார்.

பின்னர் பரிகாரத்தலமான தேனி குச்சனூர் சனீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஈஸ்வரப்பாவும், அவரது மகனும் நீராடிவிட்டு பரிகார பூஜை செய்தனர். சுமார் இரண்டரை மணி நேரம் சனீஸ்வரர் கோயிலில் இருந்தார். நேற்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதை முடித் துக்கொண்டு நேற்று பிற்பகல் திருச்சி ரங்கம் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இரவில் திருச்சியிலிருந்து விமானத்தில் பெங்களூர் சென்றார்.

கர்நாடக ஒப்பந்ததாரர் தற்கொலையால் அமைச்சர் பதவியை இழந்த ஈஸ்வரப்பா, குச்சனூர் கோயிலில் பரிகார பூஜை செய்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x