தமிழகத்தில் நல்ல ஆட்சியை திமுகவால் மட்டுமே தர முடியும்: அன்பழகன் உறுதி

தமிழகத்தில் நல்ல ஆட்சியை திமுகவால் மட்டுமே தர முடியும்: அன்பழகன் உறுதி
Updated on
1 min read

தமிழகத்தில் மக்களுக்கு நல்ல ஆட்சியை திமுகவால் மட்டுமே தர முடியும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.

திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ் ஆகியோரை ஆதரித்து, பீமநகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக இல்லை. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. கொலை, கொள்ளை பெருகிவிட்டன. போலீஸார் நடுநிலையுடன் செயல்படவில்லை. திமுக ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சியடைந்தது. ஆனால், அதிமுக ஆட்சியிலோ கடைசி இடத்தில் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கோப்பில்தான் கருணாநிதி முதல் கையெழுத்திடுவார். கல்விக் கடன், விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும்.

மக்களுக்கு நல்லது செய்ய திமுகவால் மட்டுமே முடியும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமெனில் அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு, திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in