Published : 24 May 2022 06:38 AM
Last Updated : 24 May 2022 06:38 AM

மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் - அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதிமுகவின் 2 வேட்பாளர்களும், காங்கிரஸின் ஒரு வேட்பாளரும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளதால், இந்த 57 இடங்களையும் நிரப்புவதற்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 31-ம் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.

தமிழகத்தில் உள்ள 6 இடங்களில், 4 இடங்கள் ஆளுங்கட்சியான திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைத்துள்ளன.

இதில் திமுகவின் 3 இடங்களுக்கான வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாண சுந்தரம், இரா.கிரிராஜன், கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடத்தை காங்கிரஸுக்கு திமுக வழங்கியுள்ளது.

இந்த ஒரு இடத்துக்கான வேட்பாளரை காங்கிரஸும், 2 இடங்களுக்கான வேட்பாளர்களை அதிமுகவும் இதுவரை அறிவிக்கவில்லை.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஓபிஎஸ் சம்மதம் தெரிவிக்காததால் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

அதேபோல, காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் அல்லது சசிகாந்த் செந்தில் பெயர் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ரமேஷ் ஆகியோரிடம் வேட்புமனுக்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செயல்படுகிறார். வேட்புமனு தாக்கலின்போது, பொது வேட்பாளர் என்றால் ரூ.10 ஆயிரம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்றால் ரூ.5 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் தேர்தல் அலுவலர்களுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x