Published : 12 Jun 2014 10:00 AM
Last Updated : 12 Jun 2014 10:00 AM

கரகாட்ட மோகனாம்பாள், நிர்மலாவை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி- ரூ.4 கோடிக்கு விடைகிடைக்குமா?

ரூ.4.04 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள் மற்றும் அவரது சகோதரி நிர்மலா ஆகியோரை 3 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு காட்பாடி நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. இதையடுத்து மோகனாம்பாள் சகோதரிகளை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபட வேட்டில் உள்ள வாடகை வீட்டில் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள் வசித்து வந்தார். அவரது வீட்டை கடந்த மாதம் 25ம் தேதி சந்தேகத்தின் பேரில் போலீஸார் சோதனை நடத்தியபோது, சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரொக்கப்பணம், 73 பவுன் தங்க நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள், வீட்டு அடமான பத்திரங்கள், வங்கி முதலீட்டு ஆவணங்கள் சிக்கின.

கரகாட்டம் ஆடிவந்த மோகனாம்பாள், சகோதரி நிர்மலாவின் மகன் சரவணன் உதவியுடன் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர்.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த மோகனாம்பாள், அவரது சகோதரி நிர்மலா, சரவணன் ஆகியோரை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்தனர். இதற்கிடையில், கடந்த திங்கள்கிழமை வேலூர் ஜே.எம்.5-வது நீதிமன்றத்தில் மோகனாம்பாள், சகோதரி நிர்மலாவுடன் சரணடைந்தார். இதையடுத்து, இருவரும் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், காட்பாடி நீதிமன்றத்தில் புதன்கிழமை இருவரும் ஆஜராகவேண்டும் என நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், காட்பாடி நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்னிலையில் மோகனாம்பாள் சகோதரிகள் இருவரும் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ரூ.4.04 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இருவரையும் 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, 3 நாட்கள் காவலில் விசாரணை நடத்தியபிறகு வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்த வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, இருவரையும் காட்பாடி போலீஸார் ரகசிய இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நீதிமன்றம் அளித்துள்ள கெடுவுக்குள் ரூ.4.04 கோடி பணத்துக்கான விடையை மோகனாம்பாள் சகோதரிகளிடம் இருந்து போலீஸார் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x