Published : 24 May 2022 06:20 AM
Last Updated : 24 May 2022 06:20 AM

மே 28-ல் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 28-ம் தேதி அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இதில் மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ள, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் வரும் 28-ம் தேதி மாலை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார். அன்று காலை திமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம்நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பதவியைக் கைப்பற்றிய திமுகவினர், கூட்டணிக் கட்சிகளுக்கே அப்பதவிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், ஒரு சிலர் தவிர மற்றவர்கள் யாரும் பதவியை விட்டுவிலகவில்லை. மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் இதுகுறித்தும் முதல்வர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர, அமைச்சரவை மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்தும் இதில் ஆலோசனை நடத்தப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x