Last Updated : 23 May, 2022 08:47 PM

 

Published : 23 May 2022 08:47 PM
Last Updated : 23 May 2022 08:47 PM

சிதம்பரத்தில் 3,000+ சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம்: பின்புலம் என்ன?

சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிவனடியார்கள்.

கடலூர்: சிதம்பரம் தில்லை நடராஜா, தில்லை காளி சாமிகள் பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவு செய்ததாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, சிதம்பரத்தில் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் தில்லை நடராஜர், தில்லை காளி சாமிகள் பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பல்வேறு இந்து அமைப்புகள், சிவனடியார்கள் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலின் நிர்வாகியை கைது செய்யக் கோரி திங்கள்கிழமை மாலை சிதம்பரத்தில் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3,000-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, சம்பவம் குறித்து தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை இல்லையென தமிழக அரசைக் கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிவனடியார்கள் முழக்கங்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் திருக்கழுக்குன்றம் தாமோதரன் சிவனடியார், திருவாரூர் நடராஜன் சுவாமிகள், சென்னை சிவவாதவூர் அடிகள், கள்ளக்குறிச்சி பாசார் சிவபாலன், சென்னை திருவெற்றியூர் விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த சிவனடியார்கள் அனைவருக்கும் காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவும் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.

முன்னதாக, காலையில் இருந்தே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிவனடியார்கள் சிதம்பரத்தில் குவிந்து வந்தனர். சிதம்பரத்திற்கு வந்த சிவனடியார்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்று அங்கு மேளதாள, சிவ வாத்தியங்கள் முழங்க நடனம் ஆடினார்கள்.

பின்னர், நடராஜர் கோவில் கனக சபைக்குச் சென்று சாமியை வழிபட்டனர். சிதம்பரத்தில் 3,000-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்பி சக்திகணேசன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x