Published : 18 May 2016 08:56 PM
Last Updated : 18 May 2016 08:56 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தைவிட்டு விலகிச் சென்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆந்திரக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையைவிட்டு விலகிச் செல்வதால் படிப்படியாக மழை குறையும். இருப்பினும், தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி காலை 11.30 மணி நிலவரப்படி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் 130 கி.மீ. தொலைவில் நெல்லூருக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இது, மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்று, ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையையொட்டி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 230 மில்லி மீட்டர், பொன்னேரியில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையைவிட்டு விலகிச் செல்வதால் தமிழகத்தில் நாளை முதல் (19-ம் தேதி) படிப்படியாக மழை அளவு குறையும். வடதமிழக கடற்கரையில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். மீனவர்கள் வடதமிழக கடற்கரை மற்றும் ஆந்திர கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

புதன் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மகாபலிபுரம், சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் தலா 140 மி.மீ., செம்பரம்பாக்கம், சென்னை விமான நிலையத்தில் தலா 120 மி.மீ., சோழவரம், காஞ்சிபுரத்தில் தலா 110 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளூரில் தலா 100 மி.மீ., வடசென்னை, செய்யாறு, ஆவடி கனரக தொழிற்சாலை, தாம்பரம், பூண்டி, செங்குன்றம், தாமரைப்பாக்கம், புழல் ஆகிய இடங்களில் தலா 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், பூந்தமல்லி, காட்டுக்குப்பம், ஸ்ரீபெரும்புதூரில் தலா 80 மி.மீ., குளச்சல், திருவள்ளூரில் தலா 70 மி.மீ., தஞ்சை மாவட்டம், பாபநாசம், காவல்துறை தலைவர் அலுவலகம், திருவையாறு, மதுராந்தகம், திருவாலங்காடு, குழித்துறை ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ., மாயனூர், மரக்காணம், திருக்காட்டுப்பள்ளி, தக்கலை, வந்தவாசி, செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x