Published : 22 May 2022 04:35 AM
Last Updated : 22 May 2022 04:35 AM

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே 24-ம் தேதி திறப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியது. இதன் காரணமாக, 16 கண் மதகு பகுதியில் ததும்பி நிற்கும் நீர்.

சென்னை: காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ம் தேதி முதல் நீர் திறந்துவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.35 அடி, நீர் இருப்பு 86.25 டிஎம்சியாக உள்ளது.

அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே மே 24-ம் தேதி (நாளை மறுநாள்) முதல் நீரை திறந்துவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12 அல்லது அதற்கு முன்பாக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறக்கப்படுவது இது 2-வது முறை. மே மாதத்தில் இவ்வாறு மிக முன்னதாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறை. இதனால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, கடந்த மாதம் 23-ம் தேதி முதல் வேலைகள் தொடங்கப்பட்டு ரூ.80 கோடியில் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. ஆறுகளில் தூர்வாரும் பணி முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வாய்க்கால்கள், வடிகால்களை தூர்வாரும் பணி துரிதமாக நடக்கிறது. இப்பணிகள் அனைத்தும் மே 31-ம் தேதிக்குள் முடிவடையும். இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், முழுமையாக டெல்டா பகுதியின் கடைமடை வரை அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய ஏதுவாகும்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

இந்நிலையில், அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கான விவசாய இடுபொருட்கள், வேளாண் கடன்கள் தடையின்றி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசு துறைகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

நீரை முறையாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து இந்த ஆண்டும் நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வளம் பெருக வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயிகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x