Published : 21 May 2022 11:02 PM
Last Updated : 21 May 2022 11:02 PM

பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசுக்கு மட்டுமே செல்லும் செஸ் வரியை குறைக்காதது ஏன்? - பாலகிருஷ்ணன் கேள்வி

(கோப்புப்படம்)

மதுரை: பெட்ரோல் டீசல் விலையில் மத்திய அரசுக்கு மட்டுமே செல்லும் செஸ் வரியை குறைக்காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் இன்று (சனிக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் படத்திறப்பு நிகழ்ச்சி மாநில குழு உறுப்பினர் ரா.விஜயராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு, நாட்டில் மொழியை பயன்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்த பார்க்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழி தான். அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் நடைமுறையில் நிகழ்வது வேறு.

சில நாட்களுக்குமுன்பு தமிழகத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவை அனுப்பி இந்தி மொழியை அதிகாரப்பூர்வமாக, அலுவல் மொழியாக எந்தளவுக்கு பயன்படுத்துகின்றனர் என ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவும் இருக்கிறது எனச் சொல்லும் மோடி, அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக அங்கீகரித்து ஆட்சி மொழியாக அறிவிக்கத் தயாராக இருக்கிறாரா என்று தெரிவிக்க வேண்டும்.

இந்தி போன்று மற்ற மொழிகளையும், தமிழ் மொழியையும் வளர்க்க ஏன் அலுவல் மொழிக் குழுவை அமைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 2024-ல் தேர்தல் வருவதாலும், தங்களுடைய இந்தி மொழிக் கொள்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் அதனை சமாளிப்பதற்காக பிரதமர் மோடி இப்படி ‘பாவலா’செய்து வருகிறார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தால் மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் அவசரம் அவசரமாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். அது பெட்ரோல், டீசலில் கலால் வரி ரூ. 8 குறைத்திருப்பதாக அறிவித்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா பொருட்களின் விலை குறைந்த போது ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு ரூ.350 உயர்த்த வேண்டிய அவசியம் என்ன?. கலால் வரியில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பங்கு போகிறது. ஆனால் செஸ் வரி முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு மட்டுமே செல்கிறது.

இப்படி மத்திய அரசுக்கு மட்டுமே வருவாயாக செல்லும் செஸ் வரியை குறைக்காமல் மாநில அரசுக்கும் செல்லும் கலால் வரியை குறைப்பது ஏன்? கடந்த ஆண்டில் மட்டும் செஸ் வரி மூலம் மத்திய அரசு ரூ.28 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆகையால் தான் செஸ் வரியை ரத்து செய்யக் கோருகிறோம். செஸ் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைந்து விடும். எனவே பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசு செஸ் வரியைத் திரும்பப்பெற வேண்டும்.

தமிழகத்தில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாக தனியார் கல்லூரி ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய சுகாதார ஆய்வு நிறுவனமும் குடும்ப வன்முறை நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்கள் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x