பேரறிவாளனை கட்டியணைத்த முதல்வர் | “இது அரசியல் வன்முறையை வளர்க்கும்” - எச்.ராஜா ஆவேசம்

பேரறிவாளனை கட்டியணைத்த முதல்வர் | “இது அரசியல் வன்முறையை வளர்க்கும்” - எச்.ராஜா ஆவேசம்
Updated on
1 min read

சென்னை: "பேரறிவாளனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்தது அரசியல் வன்முறையை வளர்க்கும்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். அப்போது பேரறிவாளனைக் கட்டியணைத்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், இது போன்ற சம்பவம், தமிழகத்தில் அரசியல் வன்முறையை மேலும் வளர்க்கும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "11-05-1999 அன்று உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் செய்த குற்றங்களை பட்டியலிட்டு தண்டனை வழங்கியது. ஆனால் இன்று பேரறிவாளன் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதை போல முதல்வர், பேரறிவாளனை அழைத்து கட்டியணைத்து குற்றத்திற்கு ஊக்கமளிக்கின்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழகத்தில் அரசியல் வன்முறையை மேலும் வளர்க்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்ட கருத்து: "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி, தனிச் சிறப்பு உடையதாக கருதி இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதனால், இந்த தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இவர்கள் குற்றவாளிகள் என்பதை எப்போதும் மறக்க கூடாது. ஒரு முன்னாள் பிரதமரை, தமிழ் மண்ணில் கொன்றிருக்கிறார்கள்.

ஆனால், பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நடந்துகொண்ட விதங்களை பார்த்தால், ஏதோ நிரபராதியை விடுதலை செய்ததுபோன்று கொண்டாடுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நடந்துகொண்ட விதத்தை பார்க்கும்போது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, நேர்மையாக சட்டத்தை நிலைநாட்டக்கூடிய முதல்வராக இருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.

பாஜகவை பொறுத்தவரை 7 பேரும் குற்றவாளிகள்தான். உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து சில காரணங்களால் விடுதலை செய்திருக்கிறதே தவிர, அவர்கள் கொண்டாடப்படக்கூடியவர்கள் அல்ல. வரலாற்றில் திமுக தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைத்திருக்கிறது. அவர்களை கொண்டாடி வருங்கால தலைமுறையினருக்கு தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது.

7 பேர் விடுதலைக்கு அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றினாலும், விடுதலையான பிறகு அவரை அதிமுகவினர் யாரும் ஆரத்தழுவி, கட்டியணைத்து, முத்தமிட்டு கொண்டாடவில்லை. இந்த தீர்ப்பின்படி, சிறையில் பேரறிவாளனின் நடத்தை, 2 முறை பரோலில் வந்த பிறகு அவரது நடத்தை, எந்த புகாருக்கும் இடமின்றி இருந்தது போன்ற காரணங்களால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனவே, இத்தீர்ப்பு மற்ற 6 பேருக்கு பொருந்தாது” என்றார் அண்ணாமலை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in