Published : 20 May 2022 11:28 AM
Last Updated : 20 May 2022 11:28 AM

இந்தியாவின் முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் சோதனை செய்த மத்திய அமைச்சர்

சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தார்.

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருகிறது என பிரதமர் மோடி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

"5ஜி சேவை அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரத்தில் கூடுதலாக 45,000 கோடி டாலர் புழங்கும். இதையடுத்து வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக இணையதள வசதியை வழங்கும். இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு தனது பணிகளை தொடங்கிவிட்டது" என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக 5ஜி வீடியோ, ஆடியோ கால் சேவையை மத்திய அமைசர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐஐடி வளாகத்திலிருந்து சோதித்துப் பார்த்தார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "5ஜி காலை ஐஐடி சென்னை வளாகத்தில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தேன். ஒட்டுமொத்தமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெட்வொர்க்" என்று பதிவிட்டிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது பிரதமரின் கனவு. அவர் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார். இது இந்திய உலகத்துக்காக உருவாக்கிய தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். இந்த தொழில்நுட்ப புரட்சிகளைக் கொண்டு நாம் உலகை வெல்ல வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x