Published : 20 May 2022 06:27 AM
Last Updated : 20 May 2022 06:27 AM

தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் முன்பு அரசு மருத்துவர் தம்பதி திடீர் தர்ணா

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களாக பணியாற்றும் ஆனந்த் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோர் நேற்று தங்கள் 5 வயது மகனுடன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென அவர்கள் எஸ்பி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றபோலீஸார் விரைந்து வந்து அவர்களிடம் பேசி, சமாதானப்படுத்தி எஸ்பியிடம் மனு கொடுக்க ஏற்பாடுசெய்தனர். எஸ்பியிடம் அவர்கள் அளித்த மனு விவரம்:

நாங்கள் இருவரும் கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்மருத்துவர்களாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.

கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் எங்களை பணி ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் தொந்தரவு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக எங்கள் மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால் எங்களால் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை.

இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x