சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி வழிபட அரசு அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

சிதம்பரம் நடராஜர் கோயில்.
சிதம்பரம் நடராஜர் கோயில்.
Updated on
1 min read

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது பொதுமக்கள் பக்தர்கள் ஏறி வழிபட சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த நிலையில், நடராஜர் கோயில் கனக சபையில் ஏற்றி வழிபட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபடச் சென்றார். இதற்கு தீட்சிதர்கள் அவரை வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். இந்த காணொளி அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் செயல்பாட்டை கண்டித்து மக்கள் அதிகாரம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திராவிடர் கழகம், தெய்வத் தமிழ் பேரவை, சிவனடியார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள் ஆதிகாலம் முதல் கனகசபையில் ஏறி வழிபட்டது போல் அனுமதிக்க வேண்டும் என போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த 17ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று (மே.19) சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி அரசாணை குறித்து விபரம் அளிக்க சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தீட்சதர்கள் அவர்களின் கூட்டத்தில் விவாதித்து வருகிறார்கள்.

அரசாணை குறித்து கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மூத்த துணைத் தலைவரும், நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் வழிபட வேண்டும் என்பது குறித்து வழக்கு தொடுத்தவருமான ஜெமினி எம்என் ராதா கூறுகையில், ''பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழகத்தில் முதல்வர் பொற்கால ஆட்சி நடத்தி வரும் சூழலில் அனைத்து மக்களும் கனகசபையில் ஏறி வழிபடலாம் என அரசாணை வெளியிட்டது அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.

இதனிடையே, சிதம்பரம் நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in