Published : 19 May 2022 07:22 AM
Last Updated : 19 May 2022 07:22 AM

கோவை, நீலகிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் கோவை வருகை

கோவை: கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம்நேற்று இரவு கோவைக்கு வந்தார்.

கோவையில் நடக்கவுள்ள 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவுசென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவரை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்,மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, காவல் ஆணையர் பிரதீப்குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற முதல்வர் நேற்று இரவு அங்கு தங்கினார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தொல்லியல் துறையுடன் இணைந்து ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சி ஆகியவை, அவிநாசி சாலை, உப்பிலிபாளையத்தில் உள்ள வஉசி மைதானத்தில் இன்று (19-ம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இக்கண்காட்சி அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, அவிநாசி சாலை, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் முனைவோர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தொழில் முனைவோர்கள் முன்னிலையில் முதல்வர் பேசுகிறார்.

கோவை நிகழ்வுகள் முடிந்த பின்னர், மதியம் 2.30 மணிக்கு நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்லும் முதல்வர், இன்று இரவு அங்கு தங்குகிறார். அங்கு தாவரவியல் பூங்கா வளாகத்தில் நாளை (20-ம் தேதி) மலர்க் கண்காட்சியை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மே 21-ல் ‘உதகை-200’ சிறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அன்று இரவு உதகையில் தங்கிவிட்டு, மே 22-ம் தேதி சாலை மார்க்கமாக கோவைக்கு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x