Published : 19 May 2022 06:24 AM
Last Updated : 19 May 2022 06:24 AM

ஒரு நாட்டின்‌ வளர்ச்சியில்‌ இளைஞர்களால்‌தான்‌ மாற்றத்தை ஏற்படுத்த முடியும்‌: குடியரசு துணைத் தலைவர் கருத்து

உதகை: இளைஞர்களால்‌தான்‌ ஒரு நாட்டின்‌ வளர்ச்சியில்‌ மாற்றத்தை ஏற்படுத்த முடியும்‌ என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். அங்கு பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், அவர் பேசியதாவது: இளைஞர்களால்‌தான்‌ ஒரு நாட்டின்‌ வளர்ச்சியில்‌ மாற்றத்தை ஏற்படுத்த முடியும்‌. இந்தியா உலகின்‌ முன்னணி நாடாக உருவெடுக்கும்‌ வாசலில்‌ நிற்கிறது. உங்கள்‌ எதிர்காலமும்‌ நமது தேசத்தின்‌ எதிர்காலமும்‌ ஒன்றோடொன்று பின்னிப்‌ பிணைந்துள்ளது என்பதைச்‌ சொல்ல வேண்டியதில்லை. இந்தியாவைப்‌ பற்றி உலகமே பேசும்‌ அளவுக்கு, புதிய உச்சத்துக்கு எடுத்துச்‌ செல்வதை உறுதி செய்வது உங்கள்‌ பொறுப்பாகும்‌.

ஒரு மரம்‌ செழிக்க, அவ்வப்போது தன்‌ வளங்களை நிரப்பி, புதிய பூக்களைத் துளிர்க்க வேண்டும்‌ என்பது மட்டுமல்ல, அது உறுதியாக வேரூன்றவும் வேண்டும்‌ என்பதற்கு இயற்கை ஆதாரம்‌ அளிக்கிறது. நமது பண்டைய இந்தியப்‌ பண்பாட்டைப்‌ பற்றிப் பேசும்போது இந்த ஒப்புமை இன்னும்‌ பொருத்தமானதாகக்‌ கருதுகிறேன்‌,

உங்களுக்கு கிடைத்ததைப் போன்ற அதிர்ஷ்டமும், சலுகையும் கிடைக்காத பல குழந்தைகள் நம் நாட்டில் உள்ளனர் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். எனவே, சமூகத்தின் மீது உங்களுக்கு அதிக பொறுப்பும், கடமையும் உள்ளது. வசதி வாய்ப்பு குறைவாக உள்ள குழந்தைகளின் மேம்பாட்டுக்காக நீங்கள் கற்றுக்கொண்ட அனைத்தையும் செயல்படுத்த வேண்டும். இந்தக் கற்றலின் பரிசை எடுத்து, அதை உங்களைச் சுற்றிப் பரப்புங்கள். இதனால், உங்களுடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நபரும் அதன் பலனைப் பெறலாம்.

ஒருபோதும்‌ விட்டுக்கொடுக்காதே என்ற உங்கள் பள்ளியின் பொன்மொழி, பின் வருவனவற்றுக்கு ஒருபோதும்‌ அடிபணிய வேண்டாம்‌ என்ற அறிவுறுத்துகிறது. ஆணவத்துக்கு ஒருபோதும்‌ இடமளிக்காதீர்கள்‌, சத்தியத்தின்‌ முகத்தில்‌ ஒருபோதும்‌ பொய்யை விட்டுவிடாதீர்கள்‌, சமரசத்துக்கான அழுத்தத்திற்கு ஒருபோதும்‌ இடமளிக்காதீர்கள்‌, ஊழலுக்கு ஒருபோதும்‌ இடமளிக்காதீர்கள்‌, சோதனைகளுக்கு ஒருபோதும்‌ இடமளிக்காதீர்கள்‌, மனநிறைவுக்கு ஒருபோதும்‌ இடமளிக்காதீர்கள்‌, வாழ்க்கையின்‌ சோதனைகள்‌ மற்றும்‌ இன்னல்களுக்கு ஒருபோதும்‌ அடி பணியாதீர்கள், ஒரு மனிதனாக உங்கள்‌ கண்ணியத்தை கெடுக்கும்‌ எதையும் ஒருபோதும்‌ செய்யாதீர்கள்‌.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், லவ்டேல்‌ லாரன்ஸ்‌ பள்ளி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் ராஜேஷ்‌ சந்திரா, சரஸ்வதி, தலைமையாசிரியர்‌ பிரபாகரன்‌, ஊழியர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x