Published : 15 May 2016 11:06 AM
Last Updated : 15 May 2016 11:06 AM

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் மே 23-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அரவக்குறிச்சி தொகுதியில் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 234 தொகுதிகளுக்கு உட்பட்ட 66,007 வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏப்ரல் 22 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 6 பறக்கும் படையினர், இரு வீடியோ கண்காணிப்புக் குழுவினரும் நியமனம் செய்யப்பட்டனர்.

இதுதவிர மத்திய வருவாய்த் துறை அதிகாரி தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி மத்திய வருவாய்த் துறையினர் அரவக்குறிச்சியில் அன்புநாதன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ. 4.77 கோடியை கைப்பற்றினர்.

அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், தமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ள அனைத்திந்திய அதிமுகவைச் சார்ந்த அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேலும், அன்புநாதன் வீட்டிலிருந்து 200 சேலைகள் மற்றும் வேஷ்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர பணம் எண்ணும் இயந்திரங்களும், பதிவு செய்யப்படாத ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் கைப்பற்றப்பட்டன. வேஷ்டி, சேலைகள் ரூ. 1.30 கோடிக்கு வாங்கப்பட்டதற்கான ரசீதும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதிலிருந்து அதிக அளவில் பணம் இங்கிருந்து வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சோதனை குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன.

இதைத் தொடர்ந்து மே மாதம் 10 ஆம் தேதி மத்திய வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியின் வீட்டிலிருந்து ரூ. 95 லட்சமும், சென்னையில் உள்ள அவரது மகன் கே.சி.பி.சிவராமன் வீட்டிலிருந்து ரூ. 1.03 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர தேர்தல் ஆணையத்துக்கு பணம் விநியோகம் தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து ரூ. 68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 429 லிட்டர் மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பணம் விநியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மொத்தம் 33 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளையும் ஆய்வு செய்ததில் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.

அரவக்குறிச்சி தொகுதியில் நியாமான தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என தெரிய வருவதால், அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது. மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்'' என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

மதிமுக சார்பில் கோ.கலையரசன், பாமக சார்பில் ம.பாஸ்கரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கு.அரவிந்த், ஐஜேகே சார்பில் சி.எஸ்.பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x