Published : 19 May 2022 06:36 AM
Last Updated : 19 May 2022 06:36 AM

கரூர் | மகள் நகைகளை மறைத்து வைத்திருந்ததை அறியாமல் அரிசி மூட்டையை விற்ற தாய்

கரூர்: கரூரில் மகள் 47.5 பவுன் நகைகளை மறைந்து வைத்திருந்த அரிசி மூட்டையை தெரியாமல் விற்றுவிட்ட தாய், பின்னர் அரிசி மூட்டையை வாங்கிச் சென்றவர்கள் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கரூர் தெற்கு காந்திகிராமம் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சரஸ்வதி(62). இவரது மகள் கனிமொழி ஐதராபாத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கரூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த கனிமொழி, தனது 47.5 பவுன் நகைகளை வீட்டில் இருந்த அரிசி மூட்டையில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தாயிடம் தெரிவிக்காமல் ஐதராபாத் சென்றுவிட்டார்.

இதற்கிடையே, அரிசி மூட்டைக்குள் நகைகள் இருப்பது தெரியாமல், அந்த அரிசி மூட்டையை சரஸ்வதி விற்றுவிட்டார். பின்னர், தாய் சரஸ்வதிக்கு செல்போனில் தொடர்புகொண்ட கனிமொழி, அரிசி மூட்டையில் நகைகளை மறைத்து வைத்திருந்த விவரத்தைக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, இதுதொடர்பாக தாந்தோணிமலை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின்பேரில், சரஸ்வதியிடம் அரிசி வாங்கிச் சென்ற மினிவேன் ஓட்டுநரான நரிக்கட்டியூர் சாலையைச் சேர்ந்த மனோஜ்(22), புதுவசந்தம் நகரைச் சேர்ந்த விமலா(47) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x