Published : 18 May 2022 11:37 AM
Last Updated : 18 May 2022 11:37 AM

விசாரணை முதல் விடுதலை வரை - பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. 1991-ம் ஆண்டு முதல் பேரறிவாளனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றது முதல் 2022-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டது வரை இந்த வழக்கு கடந்துவந்த பாதை

> 1991, மே 21-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

> 1991 ஆண்டு ஜூன் மாதம் பேரறிவாளனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவரது வயது 19, பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

> கடந்த 1998 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்பட இந்த வழக்கில் தொடர்புடைய 25 பேருக்கு மரண தண்டனை விதித்து வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

> உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் 1999-ம் ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டனர்.

> பேரறிவாளன், நளினி, முருகன் மற்றும் சாந்தனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

> கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரறிவாளன் மற்றும் மற்ற 3 பேர் அனுப்பிய கருணை மனு மீது எந்த முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

> 2015, டிசம்பர் மாதம் அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தன்னை விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்.

> 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

> 2017 நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிபிஐயின் முன்னாள் விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார்.

> 2018 ஏப்ரல் மாதம் தமிழக அரசின் கருத்துருவை மத்திய அரசு நிராகரித்தது.

> 2018 செப்டம்பரில் அதிமுக ஆட்சியில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

> 2021 ஜூன் மாதம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் , தனது மகனை நிரந்தரமாக விடுதலை செய்யவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.

> இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செயய்க் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில், 2022 மார்ச் மாதம், பேரறிவாளனுக்கு முதல் முறையாக ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

> 2022 மே 11-ம் தேதி இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

> 2022 மே 18 உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x