Last Updated : 18 May, 2022 10:40 AM

 

Published : 18 May 2022 10:40 AM
Last Updated : 18 May 2022 10:40 AM

சிதம்பரத்தில் ஆயுதப் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உடலை மீட்டு போலீஸார் விசாரணை

கடலூர்: சிதம்பரத்தில் பொதுத்தேர்விற்காக தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுத படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, சிதம்பரம் கல்வி மாவட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்றும் 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுக்கான விடைத்தாள்கள் வைக்ககும் மையமாக உள்ளது. இந்த விடைத்தாள்களை வைக்கும் அறைக்கு புவனகிரி வட்டம் சேந்திரக் கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் பெரியசாமி (26) பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார்.

இவருடன் தீயணைப்புத்துறை வீரர் ராஜ்குமார் என்பவரும் பணியில் இருந்துள்ளார். இருவரும் கடந்த 6 ஆம் தேதி முதல் தனியார் பள்ளியில் உள்ள மையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று( மே.18) அதிகாலை ஆயுதப்படை காவலர் பெரியசாமி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தீயணைப்புத்துறை வீரர் ராஜ்குமார் அளித்த தகவலின் பேரில். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படவிளக்கம்- ஆயுத படை காவலர் பெரியசாமி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை தூப்பாக்கியை போலீஸார் பார்வையிட்டனர்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிதம்பரம் நகர போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர் பெரியசாமிக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர் உயிரிழப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் கூறியதாவது: "எதற்காக நிச்சயதார்த்தம் ஆன நிலையில் ஆயுதபடை காவலர் பெரியசாமி தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்திட உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறினார். சிதம்பரம் கல்வி மாவட்ட, மாவட்ட கல்வி அலுவலர் சவுந்திரராஜனும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். தனியார் பள்ளியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x