Published : 18 May 2022 06:21 AM
Last Updated : 18 May 2022 06:21 AM

கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான சிலை: மயிலாப்பூர் தெப்பக் குளத்தில் மீண்டும் தேடுதல் பணி

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு பின்னர் அந்த சிலை மாயமானது. அதற்குப் பதிலாக, பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது.

“இது ஆகம விதிகளுக்கு எதிரானது. புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்தசிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில், மாயமான சிலை மயிலாப்பூர் தெப்பக் குளத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, தீயணைப்பு துறையினர், நீச்சல் வீரர்கள் உதவியுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தெப்பக் குளத்தில்தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணியின்போது, மயில் சிலை கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பிமோகன் தலைமையிலான போலீஸார் நேற்று காலை முதல் தெப்பக் குளத்தில் சிலையைத் தேடும் பணியில் மீண்டும் ஈடுபட்டனர்.

மயிலாப்பூர், அசோக் நகர், திருவான்மியூர் தீயணைப்பு நிலைய 25 வீரர்கள், ஸ்கூபா டைவிங் தெரிந்த மீனவர்கள் 7 பேர் இணைந்து, சிலையைத் தேடியும் சிலை கிடைக்கவில்லை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x