Published : 17 May 2022 01:11 PM
Last Updated : 17 May 2022 01:11 PM

“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி” - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

செங்கல்பட்டு: பள்ளிக் கல்விக்கு காமராஜர் என்று சொன்னால், கல்லூரி கல்விக்கு கருணாநிதி என்றும், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்..

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது: "இந்த அரசு உயர் கல்வியில் முதலில் இருந்தே மிகுந்த கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனால்தான், மறைந்த முதல்வர் கருணாநிதி அப்போதே நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இன்று தேசிய உயர் கல்வி மாணவர் சேர்க்கையானது 27.1 விழுக்காட்டை விட அதிகமாக, அதாவது 51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழகத்தில் உயர் கல்வி பெற்றுள்ளனர் என்றால், அந்தப் பெருமை முழுவதும் மறைந்த முதல்வர் கருணாநிதியையே சாரும்.

பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தது மட்டுமின்றி, அதற்கான உச்ச நீதிமன்ற அங்கீகாரத்தையும் அவர் பெற்றுத் தந்தார். எனவேதான், சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது நான் குறிப்பிட்டுச் சொன்னேன். பள்ளிக் கல்விக்கு காமராஜர் என்று சொன்னால், கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி என்று கூறினேன்.

உயர் கல்வியில் அகில இந்திய மாணவர் சேர்க்கை விகிதத்தை தாண்டி, தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. இருந்தாலும், தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், ஆராய்ச்சி படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

உலகிலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கின்றனர் என்ற நிலையை உருவாக்கவே " நான் முதல்வன்" என்ற திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x