Published : 17 May 2022 06:29 AM
Last Updated : 17 May 2022 06:29 AM

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி: கோவையில் வரும் 19-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

கோவை வ.உ.சி மைதானத்தில் முதல்வர் திறந்துவைக்கும் கண்காட்சிக் கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

கோவை: தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சியை கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் 19-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நாளை மறுதினம் (மே 19) கோவை வ.உ.சி மைதானத்தில் ‘பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சி’ நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் முனைவோர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேசுகிறார்.

வரும் 20-ம் தேதி நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். 21-ம் தேதி உதகை -200 விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (18-ம் தேதிமாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவினர் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். அன்று இரவு கோவை ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் தங்குகிறார். 19-ம் தேதி காலை கோவையில் நடக்கும் இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர், மதியம் கார் மூலம் உதகைக்கு புறப்பட்டுச் செல்கிறார். 21-ம் தேதி வரை அங்கு தங்குகிறார்.

கோவை வஉசி மைதானத்தில்அகழ்வாராய்ச்சி மற்றும் ஓவியக் கண்காட்சி முன்னேற் பாட்டுப் பணிகளை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x