Published : 17 May 2022 06:12 AM
Last Updated : 17 May 2022 06:12 AM

மதம் மாறக் கட்டாயப்படுத்தி தாக்குவதாக புகார்: ராமநாதபுரத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம்: மதம் மாறக் கட்டாயப்படுத்தும் கிராமத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ராமநாதபுரம் ஆட்சி யர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்ப குடும்பன் பச்சேரியைச் சேர்ந்த சவுந்திரராஜன் மனைவி வளர்மதி(53). இவர் நேற்று தனது மருமகள், பேரன்கள் மற்றும் வேறு கிராமங்களைச் சேர்ந்த தனது உறவினர்கள் சிலருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார்.

ஆட்சியரின் மக்கள் குறைதீர்க் கூட்ட அரங்குக்கு வெளியே வளர் மதி திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக் குளிக்க முயன்றார்.

இதைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனர். தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் குறைதீர்க் கூட்டத்தைவிட்டு வெளியே வந்து வளர்மதியிடம் விசாரித்த பின்னர் மனுவைப் பெற்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரி வித்தார்.

இது குறித்து வளர்மதி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: எனது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு என்னை விட்டுப் பிரிந்து விட்டார். நான் மகனுடன் வசித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் எனது குடும்பம் மட்டுமே இந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தது. மற்ற அனைவரும் கிறிஸ்தவ தேவேந் திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ மதத் துக்கு என்னை மாறச்சொல்லி அனைவரும் ஒன்று சேர்ந்து பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகின்றனர்.

எனது குடும்பத்தினர் மாறா ததால் அடிக்கடி எங்களுடன் சண்டையிட்டு தகராறு செய்து அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குறித்து நான் காவல்துறையில் புகார் அளித்தால் வழக்குப்பதிவு மட்டுமே செய்கின்றனர்.

இப்பிரச்சினையால் எனது மகன் சதீஸ்குமார்(31) தனது மனைவியின் ஊரான பேராவூரில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

கடந்த 6-ம் தேதி எனது மகன் வேலை முடித்து வரும்போது பேராவூர் நான்குமுனை சந்திப்புச் சாலையில், அவரை மறித்து கருப்பகுடும்பன் பச்சேரியைச் சேர்ந்த தாமஸ், வினோத், விஜித், பிரவீன், பிரதீப் உள்ளிட்ட சிலர் கடுமையாகத் தாக்கினர். படுகாயமடைந்த மகன், ராம நாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று, தற்போது மனைவி வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார்.

இது தொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு மட்டுமே பதிவு செய்தனர். யாரையும் இதுவரை கைது செய்யவில்லை.

எனது புகார் மீது காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததால், மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்றேன். மதம் மாற வற்புறுத்தி தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x