Published : 17 May 2022 12:42 AM
Last Updated : 17 May 2022 12:42 AM

'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?' - ட்விட்டரில் அண்ணாமலை Vs அமைச்சர்

சென்னை: தமிழ்த்தாய் புகைப்படம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் நடைபெற்றது. வாடிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இது தொடர்பாக வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து என்று பதிவிட்டு இருந்தார்.

அமைச்சரின் ட்விட்டரை பகிர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்று பதிவிட்டிருந்தார். அத்துடன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் 'தமிழணங்கே' என்ற தலைப்பில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்கிற வரிகளுடன் தமிழ் தாய் என்று ஒரு ஓவியத்தை பதிவிட்டார். இந்நிலையில் அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் "தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்” என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்." என்று தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த ட்வீட்டுக்கு பதில் கொடுத்துள்ளார் அண்ணாமலை. அதில், "தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். "தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது.

"ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x