

இன்று ஆளுநருடன் சந்திப்பு - 23-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்
அதிமுக புதிய எம்எல்ஏக்கள் கூட் டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான கடிதத்தை ஆளுநர் ரோசய்யாவிடம் அவர் இன்று அளிக்கிறார். 6-வது முறையாக தமிழக முதல்வராக 23-ம் தேதி ஜெயலலிதா பதவியேற்கிறார்.
தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் தவிர, மற்ற 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. எல்லா தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் அதிமுக கூட்டணி 134 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காமராஜர், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி ஜெயலலிதா புதிய சாதனை படைத்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 6-வது முறையாக அவர் தமிழக முதல்வராகிறார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் சென்னையில் பெரியார், அண்ணா, எம். ஜி.ஆர். சிலை களுக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். அவருக்கு வழியெங்கும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அதி முகவின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப் பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத் தில் மாலை யில் நடந்தது. 5.05 மணிக்கு தொடங்கிய கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, பழனியப் பன், ஓ.எஸ்.மணியன், கே.ஏ. செங்கோட்டையன், பி.தனபால், பொள்ளாச்சி ஜெயராமன், வெற் றிவேல் உள் ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், தோழமை கட்சி களைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, கு.தனியரசு, நடிகர் கருணாஸ் ஆகியோர் பங்கேற்றனர். திருப் பரங்குன்றம் எம்எல்ஏ சீனிச்சாமி உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. அவரது மகன் விஜயகுமார், சீனிச்சாமி அளித்த கடிதத்தை சமர்ப்பித்தார். மாலை 5.40 மணிக்கு கூட்டம் முடிந்தது.
இக்கூட்டத்தில், ஜெயலலி தாவை சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்ததும், தீர்மானம் மற்றும் எம்எல்ஏக்கள் கையெ ழுத்து அடங்கிய கடிதம் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் ரோசய்யாவை ஜெயல லிதா இன்று சந்திக்கிறார். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் ஜெயலலிதா கடிதம் அளிக்க உள்ளார்.
ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததும், 23-ம் தேதி பகல் 12 மணிக்கு மேல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது. ஆளுநர் ரோசய்யாவை ஜெயலலிதா இன்று சந்திக்கும்போது புதிய அமைச்சரவைப் பட்டியலையும் அவரிடம் அளிப்பார் என்று தெரிகிறது. 30 அமைச்சர்கள் வரை புதிய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும் புது மு கங்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.