Published : 15 May 2022 04:20 AM
Last Updated : 15 May 2022 04:20 AM

வங்கியில் போலி ஆவணங்களைக் கொடுத்து கடன் பெற்று மோசடி: நாமக்கல்லைச் சேர்ந்த 2 தொழிலதிபர்களுக்கு 3 ஆண்டு சிறை - கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல்

நாமக்கல்லில் வங்கியில் போலி ஆவணங்களை வழங்கி கடன் பெற்று மோசடி செய்த 2 தொழிலதிபர்களுக்கு சிபிஐ நீதிமன்றம் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. உடந்தையாக இருந்த வங்கி மேலாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் சக்திவேல், விஜயகுமாரி. இருவரும் தனியார் இயற்கை உரம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு நாமக்கல் இந்தியன் வங்கிக் கிளையில் இருவரும் போலி ஆவணங்களைக் கொடுத்து கடன் விண்ணப்பம் அளித்துள்ளனர். வங்கி மேலாளர் பாலசுப்ரமணியன் ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல் விதிமுறைகளை மீறி அவர்களுக்கு கடன் வழங்கியுள்ளார். கடன் பெற்ற தொழிலதிபர்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லை.

இதன் மூலம் வங்கிக்கு ரூ. 2 கோடியே 61 லட்சத்து 63 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியன் வங்கி நிர்வாகம் கோவை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் புகார் செய்தது. தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கோவை சிபிஐ நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், போலி ஆவணங்களைக் கொடுத்து கடன் பெற்ற குற்றத்திற்காக தொழிலதிபர்கள் சக்திவேல், விஜயகுமாரி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆவணங் களை முறையாக சரிபார்க்காமல், விதிமுறைகளை மீறி கடன் வழங்கிய வங்கி மேலாளர் பாலசுப்ரமணியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x