

சென்னை: காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.80 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் விஜய் வழங்கி பாராட்டினார்.
தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று வெற்றிபெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்று ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்திரவேலுக்கு ரூ.30 லட்சம், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கி பாராட்டினார்.
இதில் பிரவீன் சித்திரவேல் மற்றும் செல்வ பிரபு ஆகியோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் விடுதி மாணவர்களாக இருந்தவர்கள் ஆவர். மேலும் பிரவீன் சித்திரவேல் அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டின்படி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, செயலர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.