எம்எல்ஏவை வரவேற்க விடுமுறை நாளில் வரவழைக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள்

எம்எல்ஏவை வரவேற்க விடுமுறை நாளில் வரவழைக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள்
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சிறுகமணி பேரூராட்சி மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பேட்டைவாய்த்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமைத் தொடங்கிவைக்க ரங்கம் எம்எல்ஏ எம்.பழனியாண்டி வந்தார்.

இதையடுத்து, அவரை வரவேற்பதற்காக பேட்டைவாய்த்தலையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆகியவற்றில் இருந்து மாணவ, மாணவிகள் 25-க்கும் அதிகமானோர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதில் சிலரிடம் எம்எல்ஏ-வை வரவேற்கும் வகையில் வரவேற்பு அட்டைகள் அளிக்கப்பட்டிருந்தன.

ஆனால், எம்எம்ஏ எம்.பழனியாண்டி திருச்சி மாநகரில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, முற்பகல் 11.20 மணியளவில் பள்ளிக்குச் சென்றார். இதனால், காலையிலிருந்து வெயிலில் மாணவ, மாணவிகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பிற வகுப்புகளுக்கு மே 13-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், மருத்துவ முகாமைத் தொடங்கிவைக்க வந்த எம்எல்ஏ-வை வரவேற்பதற்காக பள்ளி மாணவ- மாணவிகளை வரவழைத்து வெயிலில் காக்க வைத்தது பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களின் அலட்சியத்தைக் காட்டுவதாக உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் நளாயினியிடம் கேட்டபோது, “தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பேரணிக்காகவே மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். எம்எல்ஏ-வுக்கு வரவேற்பு அளிப்பதற்காக வரவழைக்கப்படவில்லை.

அதேவேளையில், பேரணியும் நடத்தப்படவில்லை. மாணவ, மாணவிகள் சிறிது நேரம் மருத்துவ முகாம் கொட்டகையில் இருந்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in