Published : 14 May 2022 04:10 AM
Last Updated : 14 May 2022 04:10 AM

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு 300 மீட்டர் நீள சரக்கு பெட்டக கப்பல் வருகை

தூத்துக்குடி

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கு, முதலில் சிறிய கப்பல்கள் மூலம் சரக்குகளை கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து பெரிய கப்பல்களில் ஏற்றி குறிப்பிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து இலங்கை கொழும்பு துறைமுகத்துக்கு கப்பல்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கொழும்புக்கு செல்லாமல் நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு பெரிய கப்பல்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டது. இதனால் வஉசி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெரிய கப்பல்கள் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரத் தொடங்கி உள்ளன. ஏற்கெனவே 4 பெரிய சரக்கு கப்பல்கள் நேரடியாக வஉசி துறைமுகத்துக்கு வந்துள்ளன. ஏற்கெனவே அதிகபட்சம் 277 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் வந்துள்ளது.

இந்நிலையில் 300 மீட்டர்நீளமும், 40 மீட்டர் அகலமும்கொண்ட ‘பெத்ரா’ என்ற ராட்சதசரக்கு பெட்டக கப்பல் நேற்று வஉசி துறைமுகத்துக்கு வந்தது.இந்த கப்பல் 6,627 சரக்கு பெட்டகங்களை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லக்கூடியது. தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 2,937 சரக்கு பெட்டகங்கள் இறக்கி, ஏற்றப்பட்டன. தொடர்ந்து இந்த கப்பல் தூத்துக்குடியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறது.

தொடர்ந்து பெரிய கப்பல்கள் நேரடியாக வஉசி துறைமுகத்துக்கு வருவதற்கான நடவடிக்கைகளை துறைமுக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x