Published : 14 May 2022 04:00 AM
Last Updated : 14 May 2022 04:00 AM

மின் கம்பியை தொட்டு விடுவதாகக்கூறி ரயில் மீது ஏறி மிரட்டல் விடுத்த முதியவர்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் சலசலப்பு

இளங்கோவன்.

அரக்கோணம்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மின்சார ரயில் மீது ஏறி மின் கம்பியை தொடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்த முதிய வரை காவலர்கள் நீண்ட போராட் டத்துக்கு பிறகு மீட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தப்பி ஓடியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தின் 7-வது பிளாட்பாரத்தில் நேற்று முன் தினம் இரவு 11.30 மணியளவில்மின்சார ரயில் நிறுத்தப்பட்டி ருந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்ட நிலையில் ரயில்வே பாது காப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் திடீரென மின்சார ரயில் மீது ஏறினார்.

இதைப்பார்த்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை கீழே இறக்கும்படி கூறினர். ஆனால், அவர் காவலர்களின் பேச்சை கேட்டாகாமல் திடீரென எழுந்து நின்றார். கைக்கு எட்டும் தொலைவில் மின் கம்பி இருந்ததால் அதை தொட வேண்டாம் என்று காவலர்கள் எச்சரித்தனர். அவர் காவலர்களை ஏமாற்றும்படி மின் கம்பியை தொட்டுவிடுவேன் என்று கூறி விளையாட்டு காட்டினார்.

இந்த சம்பவத்தால் மற்ற பிளாட்பாரங்களில் இருந்த பொதுமக்கள் மின்சார ரயில் நிறுத்தப்பட்ட பிளாட்பாரத்தில் திரண்டனர். பொதுமக்கள் கூட்டம் கூடியதைப் பார்த்ததும் அவர் ரயில் பெட்டிகள் மீது வேகமாக நடக்கத் தொடங்கினார். மின் கம்பிகளை தொடாதவாறு 5 பெட்டிகளை அவர் வேகமாக கடந்து சென்றார். அவரை காவலர்கள் சமாதானம் செய்தும் போக்கு காட்டினார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த காவலர்கள் ரயில் நிலைய அதிகாரிகள் உதவியுடன் 7-வது நடைமேடை மின் கம்பிக்கான மின்சாரத்தை நிறுத்தினர்.

பின்னர், அவரை மீட்பதற்காக காவலர்கள் ரயில் பெட்டி மீது ஏற முயன்றனர். மேலே ஏறினால் கீழே குதித்துவிடுவேன் என்று அவர் எச்சரித்தார். இதனால், கவனமாக செயல்பட்ட காவலர்கள் ரயில் பெட்டி மீது ஏறி முதியவரை ஏமாற்றி மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (60) என தெரியவந்தது. ராமேஸ்வரம் செல்லும் ரயில் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் எதற்காக இங்கு வந்தார்? என்றும் எதற்காக இப்படி மிரட்டல் விடுத்தார் என்று தெரியவில்லை.

இதற்கிடையில், நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்ட முதியவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று காலை அவர் அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. அவரிடம் இருந்த ஆதார் அட்டையில் இருந்த தகவல்களை வைத்து ரயில்வே காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x