Last Updated : 13 May, 2022 01:49 PM

 

Published : 13 May 2022 01:49 PM
Last Updated : 13 May 2022 01:49 PM

பிறமொழியை கற்றால் தமிழ் எந்த விதத்திலும் கரைந்துவிடாது என்பதை உணர்த்தியவர் கம்பன்: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: வடமொழியைக் கற்று ராமாயணத்தை கம்பன் படைத்ததன் மூலம் பிற மொழியை கற்றால் தமிழ் எந்த விதத்திலும் கரைந்து விடாது என்பதை உணர்த்தினார் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரியில் புதுவை கம்பன் கழகம் சார்பில் 55-வது கம்பன் விழா இன்று கம்பன் கலையரங்கில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது: "நல்லாட்சிக்கு உதாரணமாக இருந்தது தசரதன், ராமன் ஆட்சி. அதேபோல புதுவையிலும் நல்லாட்சி நடக்கிறது. புதுவையில் ஓராண்டு ஆட்சி நிறைவடைந்துள்ளது. கம்பன் கூறியபடி தாய்மையான அரசு இங்கு நடந்து வருகிறது. வடமொழியை கற்று, வால்மீகியின் வடமொழி ராமாயணத்தை கற்று தமிழர்கள் பெருமைப்படும் வகையில் ராமாயணத்தை கம்பன் படைத்தார்.

எனவே பிற மொழியை கற்றால் என் தமிழ் எந்த விதத்திலும் கரைந்துவிடாது என்பதை கம்பன் உணர்த்துகிறார். தாய்மொழியை உயிரினும் மேலாக படிக்க வேண்டும். தாய்மொழிதான் உயிர். தாய்மொழியை சரியாக படிக்காமல், பிறமொழியை நிந்திப்பது எந்தவிதத்திலும் மொழிப் பற்றாகிவிட முடியாது. என் தாய்மொழியில் வளம் பெற்றுள்ளேன், பக்கபலமாக மற்றொரு மொழியை கற்கிறேன் என்பதைத்தான் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. புதுவை அரசுக்கு தமிழ் பற்றைப்பற்றி சொல்லித்தர வேண்டியதில்லை. புதுவையில்தான் தமிழ் விளையாடிக் கொண்டிருக்கிறது.

ஜிப்மரில் பணி புரிபவர்களில் 80 சதவீதத்தினர் இந்தி தெரிந்தவர்கள். அவர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிட்டனர். ஆனால் அதை அரசியலாக்கி பல இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடுகின்றனர். இது நோயாளிகளுக்கு தொந்தரவாக உள்ளது. இதனால் தான் நேரடியாக சென்று ஆய்வு செய்து தமிழ் புறக்கணிக்கப்படவில்லை என சொன்னேன்.

இருப்பினும் மறுபடியும் அரசியலாக்குகின்றனர். புதுவையில் தமிழுக்கு எந்தவிதத்திலும் தலைகுனிவு ஏற்படுவதை அரசு ஒத்துக்கொள்ளாது. என்று தமிழிசை கூறினார். முன்னதாக விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி "எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையில் புதுவை உள்ளது" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், அமைச்சர் நமச்சிவாயம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, கம்பன் கழக செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான சிவக்கொழுந்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x