Published : 13 May 2022 11:40 AM
Last Updated : 13 May 2022 11:40 AM

'தமிழகத்தில் விரைவில் பேருந்து, மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்படும்' - ஈபிஎஸ் கணிப்பு

சேலம்: "நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு இந்த அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவந்ததாக தெரியவில்லை. எனவே பேருந்துக் கட்டணத்தை நிச்சயமாக உயர்த்துவார்கள். வேறு வழி கிடையாது. ஏற்கெனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். எனவே விரைவில் பேருந்துக் கட்டணம் உயரும்" என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் மெய்யனூரில் அம்மா இலவச தையல்பயிற்சி மையத்தை எதிர்கட்சித்தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தேர்தல் சமயத்தில், திமுக சார்பில் 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு, கிட்டத்தட்ட 70 சதவீத அறிவிப்புகளை நிறைவேற்றிவிட்டதாக ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். கரோனா போன்ற சோதனையான காலக்கட்டத்தில் கூட மக்களுக்கு வாழ்வளிக்கக்கூடிய எந்தவொரு திட்டமும் இதில் இடம் பெறவில்லை. அதற்கு மாறாத சொத்துவரியை உயர்த்தியுள்ளனர்.

சேலம் மாநகரத்தில் 1,800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 100 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளனர். 25,50,100,150 சதவீதம் என்று சொத்துவரியை உயர்த்தி, மிகப்பெரிய சுமையை மக்கள் தலையில் சுமத்தியுள்ளனர். இது வேதனையளிக்கிறது. உண்மையாகவே இது மக்களுக்கு செய்யப்படுகிற மிகப்பெரிய துரோகம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் யாரும் தொழிற்சாலைகளை கொண்டு வரமுடியாது. முதல்வர் ஸ்டாலின் நினைத்தாலே கூட கொண்டுவர முடியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டதன் நோக்கமே, விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய எந்த திட்டமும், தொழிற்சாலையும் டெல்டா மாவட்டத்தில் அனுமதிக்கப்படாது என்ற திட்டத்தை கொண்டுவந்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பை ஏற்படுத்திய அரசு அதிமுக அரசு. இவர்கள் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஏதோ தொழிற்சாலை கொண்டுவருவது போலவும், அதனை தடுப்பது போலவும் செய்கின்றனர். அங்கு எந்த தொழிற்சாலையும் கொண்டுவர முடியாது. அது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசின் துணையோடு விவசாயிகளின் நலனை பாதுகாத்த அரசு அதிமுக அரசு.

பாமர மக்களையும் இந்த திமுக ஏமாற்றி விட்டது, படித்த மக்களையும் ஏமாற்றி விட்டது. ஆட்சிக்கு வருவதற்குமுன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்று இரட்டை வேடம் போடுகிறார்கள். அரசு ஊழியர்கள் அவர்களை நம்பியிருந்தார்கள், திமுகவிற்கு மிகப்பெரிய ஆதரவை அளித்தார்கள். தமிழகத்தில் இன்று 16 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். 16 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டனர். காரணம் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக, தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்திருந்தனர். மேலும் அவ்வப்போது திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவராக இருந்தபோதும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து வந்தார்.

அதனை அரசு ஊழியர்கள் மிகப்பெரிதாக நம்பினார்கள். அவர்களை நம்பவைத்து திமுக கழுத்தறுத்துள்ளது. அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவையில் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று அறிவித்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, கொடுத்த வாக்குறுதியை மறந்த கட்சி திமுக.

இது ஆரம்பம்தான். தற்போதுதான் சொத்துவரியை உயர்த்தியுள்ளனர். அடுத்தது பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியே ஆகவேண்டும். வேறு வழி கிடையாது. நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த திட்டத்தையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. எனவே நிதிப்பற்றாக்குறை வரும்போது, அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர், நிச்சயமாக அதனை உயர்த்துவார்கள்.

ஏற்கெனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். எனவே விரைவில் பேருந்துக் கட்டணம் உயரும், மின் கட்டணமும் உயர்த்தப்படும். காரணம் அதுவும் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு பால் விலையையும் உயர்த்தப்போகின்றனர் என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x