Published : 12 May 2022 05:44 AM
Last Updated : 12 May 2022 05:44 AM

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்தால் பாஜக போராட்டம் நடத்தும் - தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்கள், குழந்தைகளுக்கும், சட்டம் ஒழுங்குக்கும் அச்சுறுத்தல் தொடருமானால் பாஜக, மக்களை ஒன்றுதிரட்டும், வீதிக்கு வந்து போராடும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குற்றங்கள் அதிகரிப்பு

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே போவது மிகுந்த கவலை அளிக்கிறது. இதுபற்றி சிறிதும் கவலைப்படாமல் நான்தான் நம்பர் ஒன் முதல்வர் என்று தமிழக முதல்வர் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்.

தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டாகக் குற்றங்களே நடைபெறவில்லை என்று சட்டப்பேரவையில் பேசினால் போதுமா? தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அரங்கேறுகின்றன.

மகளிருக்கும் குழந்தைகளுக்கும், சட்டம் ஒழுங்குக்கும் அச்சுறுத்தல் தொடருமானால் பாஜக மக்களை ஒன்றுதிரட்டும், வீதிக்கு வந்து போராடும் என்பதை அரசுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x