Published : 12 May 2022 05:35 AM
Last Updated : 12 May 2022 05:35 AM

தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 12-ம் தேதி (இன்று) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 13, 14, 15-ம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

வங்கக் கடலில் நிலவும் அசானி புயல் காரணமாக 12-ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளிலும், 13-ம் தேதி மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

17 உள்நாட்டு விமான சேவை ரத்து

ஆந்திரா அருகே நிலவும் அசானி புயல் காரணமாக 2-வது நாளாக நேற்றும் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல வேண்டிய 3 விமானங்களும், விஜயவாடா செல்ல வேண்டிய 2 விமானங்களும், ராஜமுந்திரி செல்ல வேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் இருந்து வரவேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல் கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x