கோவை மாநகரில் திருச்சி சாலை, கவுண்டம்பாளையத்தில் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் மேம்பாலங்கள்

கோவை - திருச்சி சாலையில் பணிகள் நிறைவடைந்த மேம்பாலம்.    படம் : ஜெ.மனோகரன்
கோவை - திருச்சி சாலையில் பணிகள் நிறைவடைந்த மேம்பாலம். படம் : ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: கோவை மாநகரில் திருச்சி சாலை மற்றும் கவுண்டம்பாளையம் மேம் பாலங்கள் பணிகள் நிறைவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளன.

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், தேசிய நெடுஞ்சாலையான கோவை - திருச்சி சாலை (என்.எச்.181) முக்கியமானதாகும். அரசு மருத்துவமனை சந்திப்பில் இருந்து ஒண்டிப்புதூர் வரை இந்த சாலையில் தினமும் ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.232 கோடி மதிப்பில் 3.15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

திருச்சி சாலையில் அல்வேனியாபள்ளி அருகே தொடங்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதி சுங்கம் சந்திப்பை கடந்து அரசு மருத்துவமனை செல்லும் வழித்தடத்தில் தனியார் பல்பொருள் அங்காடி (பழைய பதி தியேட்டர்) அருகிலும், மற்றொரு பகுதி சுங்கம்- உக்கடம் பைபாஸ் சாலையிலும் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலம் நான்கு வழிப்பாதை யாக, 17.20 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. சுங்கம் ரவுண்டானா சந்திப்பு அருகே மட்டும் 19.60 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 111 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும்இடையே 25 மீட்டர் தூரம் இடைவெளி உள்ளது. இப்பாலம் கட்டுமான பணி நிறைவடைந்துள் ளது.

இதுதொடர்பாக, நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘திருச்சி சாலை மேம்பாலத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. சர்வீஸ் சாலை மட்டுமே அமைக்க வேண்டும். அதேபோல, மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு அருகேயிருந்து 1.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.60 கோடி மதிப்பில் கட்டப் பட்டுவந்த மேம்பால பணியும் நிறைவடைந்துள்ளது. இரு மேம்பாலங் களும் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in