Published : 12 May 2022 06:11 AM
Last Updated : 12 May 2022 06:11 AM

தனுஷ்கோடி புயலில் தப்பிய நூற்றாண்டு சிறப்புமிக்க தேவாலயம்: தொல்லியல் துறை பாதுகாக்குமா?

இடிந்து சேதமடைந்துள்ள தனுஷ்கோடி தேவாலயம்.

ராமேசுவரம்: சேதமடைந்து வரும் தனுஷ் கோடியில் உள்ள நூற்றாண்டு சிறப்புமிக்க தேவாலயத்தைப் பாதுகாக்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் தனுஷ்கோடி துறைமுகம் 1.3.1914-ல் திறக்கப்பட்டது. அப்போது பவளப் பாறை, சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு தேவாலயம் கட்டப்பட்டது.

22.12.1964-ல் தனுஷ்கோடியை தாக்கிய புயலில், ரயில் நிலையம், துறைமுகக் கட்டிடங்கள், சுங்க நிலையம் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆனால் தேவாலயம் சிறிய அளவில் இடிபாடுகளுடன் தப்பியது. நூற்றாண்டு சிறப்பு மிக்க இந்த தேவாலயத்தை காண்பதற்காக, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி வரு கின்றனர்.

வரலாற்றுச் சின்னமான இந்த தேவாலயத்தில் உள்ள பவளப் பாறைகளையும், சுண்ணாம்பு கற்களையும் சமூக விரோதிகள் சிலர் எடுத்து, தங்களது கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இதனால் தனுஷ்கோடி புயலுக்குப் பின்னர் சேதமடைந்து இடிந்த நிலையில் உள்ள தேவாலயம், கோயில், மருத்துவமனை, பள்ளிக் கூடம், ரயில்வே கேபின் உள்ளிட்ட கட்டிடங்களை, அதன் பழமை மாறாமல் தொல்லியல்துறை பராமரித்து பாதுகாத்திடும் வகையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவினை மட்டும் மேற்கொண்டது. ஆனால், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

தொடர்ந்து பருவகாலங்களில் சூறைக்காற்று மற்றும் மழையால், புயலில் மிஞ்சிய இந்த தேவாலயத்தின் சுவர்கள் அடிக்கடி இடிந்து விழுந்து வருகின்றன. எனவே தேவாலயத்தின் எஞ்சிய பகுதிகளை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க தொல்லியல்துறையும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனுஷ்கோடி மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x