Published : 11 May 2022 06:10 AM
Last Updated : 11 May 2022 06:10 AM

மின்துறையில் ரூ.13,040 கோடி உட்பட 31 பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.18,630 கோடி இழப்பு: சிஏஜி அறிக்கை

சென்னை: தமிழக மின்துறையின் 3 நிறுவனங்களில் ரூ.13,040.40 கோடி உட்பட, 31 பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 2019-20ல் ரூ.18,629.83 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக தணிக்கைத் துறை தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் என 77 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் 5 நிறுவனங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை. மீதமுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பாக, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் கடந்த 2019-20-ம் ஆண்டுக்கான கணக்குகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் 63 பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 2019-20-ம் ஆண்டில் 31 நிறுவனங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் கடந்த 2018-19ல் ரூ.17,799.23 கோடியாக இருந்த நிலையில், 2019-20ல் ரூ.18,629.83 கோடியாக இழப்பு உயர்ந்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இழப்பில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய 3 நிறுவனங்களால் மட்டும், ரூ.13,04.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு ரூ.11,964.93 கோடியாகவும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக்கழகத்தின் இழப்பு ரூ.1,074.48 கோடியாகவும் இருந்தது.

போக்குவரத்துக் கழகங்கள்

இது தவிர, 8 போக்குவரத்துக்கழகங்கள் மூலம் ரூ.5,230.58 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் ரூ.898.82 கோடி இழப்பை சந்தித்திருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x