Published : 11 May 2016 01:32 PM
Last Updated : 11 May 2016 01:32 PM

தங்கதமிழ்செல்வனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்: உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி

உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தங்க தமிழ்செல்வனை ஆதரித்து, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக கட்சி வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி தொகுதிக்கு வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, போடி, கம்பம், பெரியகுளம் (தனி) ஆகிய 4 தொகுதிகளில் ஆண்டிபட்டி, போடியில் அதிமுகவும், பெரியகுளத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை ஜெயலலிதா மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்ததோடு, வாக்கு சேகரித்து விட்டுச் சென்றார். இதனால் ஜெயலலிதா தேனி மாவட்ட பிரச்சாரத்துக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையில் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிபட்டி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வார் எனக் கூறப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வரமாட்டார் என அவரது ஆதரவாளர்களும், தொகுதி மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில், தங்க தமிழ்செல்வனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட ஜக்கம்பட்டியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஒரே வேனில் இருவரும் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டதைக் கண்ட மற்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உட்கட்சியில் பூசல் என்ற வாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x