

கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த கடலூர் சின்ன குப்பம், பெரிய குப்பம், ஆலிக்குப்பம் ஆகிய பகுதிகளில் கடலோரத்தில் மீனவர்கள் வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் தொடர்ந்து கடலரிப்பு ஏற்பட்டு வருவதால், கடற்கரை முற்றிலும் அழிந்துவிட்டது. இதனால், மீனவர்கள் மீன்பிடி படகுகளை நிறுத்த கரையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொடர்ந்து நீடித்து வரும் கடலரிப்பால் மீனவர்களின் பல்வேறு பயன்பாட்டுக்காக கரையில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், வலை உலர்த்தும் கட்டிடங்கள், மீன் பதப்படுத்தும் கட்டிடம் மற்றும் கடலோரத்தில் இருந்த மீனவர்களின் வீடுகள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
தற்போது, கடலரிப்பால் அனைத்து கட்டிடங்களும் கடலில் முழ்கும் நிலை உள்ளது. மேலும், கிராமத்தின் பிரதான சாலை வரையில் கடல் முன்னேறி வந்துள்ளது.
இதனால், கிராமத்துக்கு வந்து செல்லும் அரசுப் பேருந்தையும் கிராமத்துக்கு வெளியே நிறுத்தி இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என 3 மீனவ குப்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை வட்டாரங்கள் கூறும்போது, “இந்த மீனவர் பகுதிகளை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூண்டில் வளைவு தொடர்பாக அரசுக்கு ஏற்கெனவே ஆய்வறிக்கை வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.