Published : 10 May 2022 06:10 PM
Last Updated : 10 May 2022 06:10 PM

ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் அலகு குத்தும் திருவிழா: அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்த பக்தர்கள்

ஓசூர்: ஓசூர் ராம்நகரில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அலகு குத்தும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக அலகு குத்தும் திருவிழா நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு அலகு குத்தும் திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் காப்பு கட்டி விரதமிருந்த நூற்றுக்கணக்கான பெண் மற்றும் ஆண் பக்தர்களுக்கு அலகு குத்தும் நிகழ்வு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி ஏந்தியும், பூக்கரகம் ஆடியும், அம்மன் வேடமிட்டும், ஆண் பெண் பக்தர்கள் உடலில் ஒரு அடி முதல் 60 அடி நீளமுள்ள அலகு குத்திக் கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். மேலும், காப்பு கட்டி விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய முதுகில் அலகு குத்திக்கொண்டு பொக்லைன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு மேளதாளங்கள் முழங்க நகரின் பிரதான வீதிகளில் ஊர்வலமாக வந்து ராம்நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு அனைத்து பக்தர்களின் உடலில் குத்தப்பட்டிருந்த அலகுகள் அகற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

மேலும், சிலர் முதுகில் குத்திய அலகு மூலமாக அம்மன் எழுந்தருளி அருள்பாலித்த வாகனத்தை இழுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அலகு குத்திய பக்தர்கள் ஊர்வலமாக செல்ல வசதியாக நகரின் மகாத்மா காந்தி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த அலகு குத்தும் திருவிழாவை முன்னிட்டு நகரப்பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர், மோர் உள்ளிட்ட குளிர் பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவை ஒட்டி ஏஎஸ்பி அரவிந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x