Published : 10 May 2022 11:21 AM
Last Updated : 10 May 2022 11:21 AM

'மாணவர்களை குற்றவாளி ஆக்காதீர்கள்; டிசி அறிவிப்பை திரும்பப் பெறுக' - குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன்

சென்னை: தவறு செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாற்றுச் சான்றிதழில் காரணம் குறிப்பிடுவது மூலம் மாணவர்களை குற்றவாளி ஆக்காதீர்கள் என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய விவாதத்தின்போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்," வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திய பின்னரே பாடங்கள் நடத்தப்படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது. மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு. பள்ளிகள் - பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், டிசியிலும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்" என்றார்.

அமைச்சரின் இதுபோன்ற அறிவிப்பு மிகவும் தவறானது என்றும் இதன் மூலம் குழந்தைகளை குற்றவாளி ஆக்காதீர் என்றும் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேவநேயன் தனது சமூகவலைதள பக்கத்தில், "இது தவறான அறிவிப்பு. மாணவர்கள் தவறு செய்தால் அதை சரி செய்வது தான் சரி. அதற்காக தண்டனை வழங்குவது சரியல்ல. இதனால் குழந்தைகள் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும். இப்படி பள்ளியிலிருந்து விலகும் குழந்தைகள்தான் பல்வேறு வன்முறைகளுக்கு ஆட்படுபவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் விளிம்பு நிலை குழந்தைகளே.

மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பல்வேறு விதமான ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது?. அவர்கள் அதே பள்ளியில் தொடரலாம், மாணவர்கள் மட்டும் தொடரக்கூடாது என்பது எப்படி சரியாகும். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் வன்முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது அவர்கள் மீது முழுமையாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் வன்முறை செய்தால் அரசாணை எண் 121 , 2012 படி அவர்கள் பணிநீக்கம் செய்யப் பட வேண்டும். மேலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்படும். இந்த அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும். தயவு செய்து குழந்தைகளை குற்றவாளி ஆக்காதீர். நெறிப்படுத்துவோம். எனவே குழந்தைகளின் சிறந்த நலன் அடிப்படையில் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x