கோவை | மக்கள் சேவை மையம் சார்பில் குழந்தைகளுக்கு இலவச பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

மக்கள் சேவை மையம் சார்பில் குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதிசீனிவாசன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
மக்கள் சேவை மையம் சார்பில் குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதிசீனிவாசன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: மக்கள் சேவை மையம் சார்பில், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டு வயது வரையுள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் ‘அமுதம்’ திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசும்போது, “தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தாய் மனதுடன் இந்த முயற்சியை வானதிசீனிவாசன் மேற்கொண்டுள்ளார். இதற்கு துணையாக உள்ள ரோட்டரி அமைப்புகள், மக்கள் சேவை மையத்தின் தன்னார்வலர்கள், மளிகைக் கடைக்காரர்கள் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். மக்களுடன் இணைந்து அவர்களுக்கு தேவையானதை செய்ய பிரதமர் மோடி எங்களுக்கு முன்னோடியாக இருக்கிறார். பாஜக அரசு வந்தால்தான் இதுபோன்ற சிறப்பான எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள். வரக்கூடிய தேர்தலில் தமிழகத்தில் பாஜக அரசு அமைக்க வேண்டிய எம்எல்ஏக்களை பெறுவதற்கு இங்கு வந்துள்ள அனைவரின் உதவியும் தேவை” என்றார்.

எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும்போது, “இலவசமாக பால் வழங்க அட்டை வழங்கப்படும். அந்த அட்டையை கொண்டுவந்தால் மளிகைக் கடைக்காரர்கள் பால் அளித்துவிடுவார்கள்.

இதற்காக 50 மளிகை கடைக்காரர்கள் இந்த திட்டத்துக்கு உறுதுணையாக உள்ளனர். பயனாளிகளுக்கு தினமும் 250 மி.லி. பால் வழங்கப்படும். ரோட்டரி சங்கங்கள், தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

இந்த நிகழ்வில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in