Published : 09 May 2022 03:58 PM
Last Updated : 09 May 2022 03:58 PM

10 ஆண்டுகளில் 1,648 சதவீதமாக அதிகரித்த சைபர் குற்ற புகார்கள்: தமிழக அரசு தகவல்  

சென்னை: கடந்த 2011-ம் ஆண்டு 748-ஆக இருந்த இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது என்று காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்றும் நாளையும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு இத்துறைகளின் அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், சைபர் (இணையதள) குற்ற காவல் நிலையங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:

> டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் செல்போன்களின் பரவலான பயன்பாடு, இணையதள குற்றங்கள் வேகமாக அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

> 2011-ம் ஆண்டு இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748-ஆக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது.

> பெரும்பாலான இணையதள குற்ற வழக்குகளில் வெளிநாட்டினர் ஈடுபடுவதால், குற்றவாளிகளை கைது செய்தல் மற்றும் களவு போன சொத்துக்களை மீட்டெடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது.

> வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டாலும், சட்ட சிக்கல்கள் மற்றும் இதர நடைமுறைகள் காரணமாக, புகார்தாரருக்கு பணத்தைத் திரும்ப வழங்குவது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.

> இப்பிரச்சினையை எதிர்கொள்ள சென்னை மாநகரில் கூடுதலாக அதாவது 4 மண்டலங்களுக்கு தலா ஒன்றும், மத்திய குற்றப்பிரிவிற்கு ஒன்றும் என 5 இணையதள குற்ற காவல் நிலையங்கள் மறுபரவலாக்கும்முறை மூலம் ரூ.85.69 லட்சம் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு இதற்கான ஆணை வெளியிட்டுள்ளது.

> புலன் விசாரணையை அறிவியல் முறையில் மேம்படுத்த இணையதள தடயவியல் ஆய்வகம் அமைத்து அதில் உயர்தொழில்நுட்ப தடயவியல் கருவிகள், மென்பொருட்கள், சமூக வலைதள ஊள்ளீட்டுக் கருவிகள் அமைக்க ரூ.6.9 கோடி செலவில் "பாதுகாப்பான நகர" திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

> கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்கள் இழந்த பணம் ரூ.6.75 கோடி காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x