Published : 09 May 2022 05:53 AM
Last Updated : 09 May 2022 05:53 AM

மயிலாப்பூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாமக நிர்வாகி தீக்குளிப்பால் பதற்றம்: பொது மக்களின் தாக்குதலில் போலீஸார் காயம்

சென்னை: மயிலாப்பூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாமக நிர்வாகி தீக்குளித்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸார் காயமடைந்தனர்.

சென்னை மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 29-ம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.

இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டு வந்தது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி படிப்படியாக தற்போது வரை 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையா (55) பழக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டை இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று அதிகாரிகள் வீடுகளை இடிக்கவந்தபோது கண்ணையா திடீரென மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 92 சதவீத தீக்காயமடைந்த அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் கண்ணையாவை பார்த்தனர். இவர் பா.ம.க. வின் நிர்வாகி என போலீஸ் தெரிவித்துள்ளது.

தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 3 போலீஸார் காயமடைந்தனர். மேலும் 2 பொக்லைன் இயந்திரங்கள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பாதுகாப்புக்காக 300-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x