Published : 08 May 2022 03:47 PM
Last Updated : 08 May 2022 03:47 PM

தக்காளி காய்ச்சலுக்கும் தக்காளிக்கும் சம்பந்தமில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சேலம்: 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முகத்தில் தடிப்புகள் வருவதை ஒப்பிட்டு தக்காளி காய்ச்சல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை. எனவே மக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று 1 லட்சம் மையங்களில் 29-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்குப் பின்னர் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மனிதர்களுக்கு பல்வேறு வகையான நுண்கிருமிகள் நோய்களை ஏற்படுத்துகின்றன. இதில் தக்காளி வைரஸும் ஒன்று. இந்த வைரஸுக்கு தக்காளி வைரஸ் என்று பெயர் சூட்ட தோலில் ஏற்படும் தடிப்பே காரணம். ஏற்கெனவே சிக்கன்குனியாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு இந்த தக்காளி வைரஸ் பாதிப்பு இருக்கலாம். பல ஆண்டுகளாகவே இந்த வைரஸின் தாக்கம் அவ்வப்போது ஒருசில இடங்களில் வந்து செல்கிறது. ஆகையால் இது ஒன்றும் புதிய வைரஸ் அல்ல.

முகத்தில் தடிப்புகள் வருவதால் தக்காளி வைரஸ் எனப் பெயர் சூட்டியுள்ளனரே தவிர, தக்காளிக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த பாதிப்பு வருகிறது. எனவே தேவையற்ற பீதியடைய வேண்டாம். நன்னீரில் வளரக்கூடிய கொசுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x