Published : 08 May 2022 06:38 AM
Last Updated : 08 May 2022 06:38 AM

ஓராண்டை நிறைவு செய்த திமுக அரசு - முதல்வருக்கு ஆளுநர் ரவி, தமிழிசை வாழ்த்து

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், பல்வேறு தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘‘உங்கள் தலைமையில் தமிழக அரசு தனது ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதற்காக தங்களுக்கும், உடன் பணியாற்றுபவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் சிறப்பான தலைமையின் கீழ் தமிழக மக்கள் மகிழ்ச்சி மற்றும் வளத்துடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் தமிழகம் பெருமையின் புதிய உச்சத்தை அடைந்து, அனைத்தையும் உள்ளடக்கிய முன்னேற்றத்துக்கு நாட்டை வழிநடத்துங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் பொதுச்சேவையில் நீண்டகாலம் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதற்காக, ஆளுநருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக அரசு ஓராண்டை நிறைவுசெய்துள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பல நல்ல திட்டங்களை அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். திராவிட மாடல் என்று சொல்வதற்கு பதில் திராவிட மாதிரி என்றால் நன்றாக இருக்குமோ என்பது எனது யோசனை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x